Tuesday, October 18, 2011

கூடங்குளம் அணு மின் நிலையம்

டெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டத்தைப் பொருட்படுத்தாமல் அடுத்த மாதம் முதல் அணு மின் உற்பத்தியைத் தொடங்க இந்திய அணு சக்தி கமிஷன் நடவடிக்கைளை முடுக்கி விட்டுள்ளது. இதை அணு சக்தி கமிஷன் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஹ்ம்ம்ம்.. இதைப் பற்றி தினமலர் வெளியிட்டுள்ள கட்டுரை கீழே..

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம், கடந்த 2001ல் துவக்கப்பட்டது. ரஷ்யாவுடன் இணைந்து, 13 ஆயிரத்து, 615 கோடி ரூபாய் செலவில், 2,000 மெகாவாட் தயாரிக்க உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில், அடுத்த மாதம், மின் உற்பத்தி துவக்க நாள் குறித்தாகி விட்டது.

ஆனால், வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைத்த கதையாக, இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றொரு குரல், பல முனைகளில் இருந்து ஒலிக்கிறது. இதன் பின்னணி என்ன என்பது பற்றி விசாரணை செய்தபோது கிடைத்த தகவல்கள்:
அமெரிக்காவில், அமைதிக்கான பிஎச்.டி., படிப்பு முடித்தவர் தான், கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர், கூட்டப்புளி, இடிந்தகரை, பெரியவிளை, கூடங்குளம் பாதிரியார்கள், இவர்களுக்கு மேல் உள்ள, தூத்துக்குடி, மதுரை மறைமாவட்டம் ஆகியவற்றின் தலைமை பாதிரியார்களையும் சேர்த்துக் கொண்டு, போராட்டத்தை வலுவாக்கி வருகிறார். உள்ளூர் மீனவ சமூகமான, "பெர்னாண்டோ இனம்' என்ற அடிப்படையிலும், இவர்களை ஒருங்கிணைத்துள்ளார்.

மக்கள் ஆதரவு:
தென்மாவட்டங்களுக்கு தலைமை தாங்கும், தலைமை பாதிரியாரின் பூர்வீகம், கூடங்குளம் என்பதால், அவரும் தன் பங்குக்கு, போராட்டத்தை வழிநடத்தி வருகிறார். அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள், அங்கு பணியில் உள்ளவர்கள், அணுமின் நிலையம் வர வேண்டும் என, விரும்புகின்றனர். ஆனால், சுற்றியுள்ள பகுதிகளின் போராட்டத்தால், நெருக்கடிக்கு ஆளாகி, அமைதியாக உள்ளனர்.இவர்களது நெருக்கடியால், "ஹவுஸ் கீப்பிங்' பணி கான்ட்ராக்ட் எடுத்திருந்த, மகளிர் சுயஉதவிக் குழு பெண்களும், மனம் மாற்றப்பட்டுள்ளனர். உள்ளூர் தேவாலயங்களிலும், மக்களிடம் பேசி, மன மாற்றம் செய்யப்படுகிறது.

ஆதரவு சக்திகளின் வேலை:
கூடங்குளம் மின் நிலையம், இந்திய - ரஷ்ய கூட்டு முயற்சியில் உருவாவதை, அமெரிக்க ஆதரவு சக்திகள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த பின்னணியிலேயே, இந்த போராட்டம் உருவெடுத்துள்ளதாக, சர்வதேச அணுசக்தி வட்டாரங்கள் கருதுகின்றன.இந்த பின்னணியை அறிந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு தலைவரும், மும்பை கார்டினலுமான, கிரேசியஸ் ஓஸ்வேல்டு மற்றும் டில்லி ஆர்ச் பிஷப் வின்சென்ட் மைக்கேல் கன்செசோ ஆகியோரை ரகசியமாக சந்தித்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுத்தார்.இதன் எதிரொலியாக, கூட்டப்புளி, இடிந்தகரை பாதிரியார்களை இடமாற்ற, மும்பை கார்டினல் உத்தரவிட்டார். ஆனால், கீழே உள்ள பாதிரியார்களால் அந்த உத்தரவு புறக்கணிக்கப் பட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.போராட்டத்துக்கான செலவுகளை, ஒருங்கிணைப்பாளர் செய்து வருகிறார். மறைமுக சக்திகளிடம் இருந்து அவருக்கு பணம் வருவதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தை, ஊடகங்கள் மூலம், வெளி உலகிற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை, அதற்கான செலவை, அப்பகுதியைச் சேர்ந்த, கனிமவள அதிபர் ஒருவர் செய்து வருகிறார். கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால், அதைச் சுற்றி 15 கி.மீ., சுற்றளவுக்கு, கனிமங்கள் எடுப்பது பாதிக்கப்படும் என்பதே, அவரது ஆதரவுக்கு காரணம் என, கூறப்படுகிறது.

தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர், ஓட்டுக்களை மனதில் வைத்து, ஆரம்பத்தில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், முதல்வர் ஜெயலலிதா ஆதரவு நிலை எடுத்ததும், தொகுதி எம்.எல்.ஏ.,வைத் தவிர, அனைத்து அரசியல் பிரமுகர்களும், போராட்டத்தில் இருந்து ஒதுங்கி விட்டனர். தமிழக முதல்வரின் ஆதரவு நிலையால், கூடங்குளம் பாதுகாப்பில், மத்திய அரசு சில சிக்கல்களை சந்தித்து வருகிறது.

மத்திய அரசுக்கு தெரியும்:
இருந்தாலும், இந்த உண்மைகள் அனைத்தையும் மத்திய அரசு அறிந்துள்ளதால், அணுமின் நிலையத்தை துவக்குவதில் உறுதியாக உள்ளது. மாநில போலீஸ் ஒத்துழைக்காவிட்டால், மத்திய பாதுகாப்புடன், அணுமின் நிலையத்தை துவக்குவதில், மத்திய அரசு திடமாக உள்ளது.

முதலில் வைகோ, இப்போ விஜயகாந்த்.....

மதுரை: தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும், பத்து கட்சி எம்.எல்.ஏக்களும் அதிமுகவுக்குத் தாவப் போவதாக ஒரு சூடான செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இவர்களை அதிமுகவுக்கு இழுக்கும் பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இவர்கள் கட்சி மாறுவார்கள் என்றும் அந்த செய்தி கூறுகிறது.


இதற்கு விஜயகாந்த் என்ன விதத்தில் பதில் அளிப்பார் என்பது புதிராக உள்ளது. விஜயகாந்த் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர், ஆனால் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டு இருக்கு?

செய்தி:

சென்னை : ""மக்கள் பிரச்னைகள் தீரும் வரை, கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த வேண்டும். இதில், மாநில அரசு மீது, மத்திய அரசு வீண்பழி சுமத்த வேண்டாம்,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். பிரதமர், தனக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுவதிலும் உண்மை இல்லை என்றும் விளக்கியுள்ளார். இதுகுறித்து ஜெயலலிதா ஆதாரங்களுடன் விளக்கியுள்ளதால், கூடங்குளம் பிரச்னையில், மத்திய அரசு நாடகமாடுகிறதோ என்று சந்தேகப்படும் சூழல் உருவாகி உள்ளது.


காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை தமிழகத்தில் நிலை நாட்டுவது சாத்தியமில்லை.

Monday, October 17, 2011

நடிகர் செந்தில் வாக்களிக்கவில்லை

அதிமுகவின் பிரச்சார பேச்சாளர்களில் ஒருவரான செந்தில் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.

அரசே சரியாக இயங்காதபோது கேமரா மட்டும் எப்படி இயங்கும் - கலைஞர்

சென்னை: அரசே ஒழுங்காக இயங்கவில்லை என்று நான் சொல்லி வருகிறேன். பிறகு எப்படி வெப் கேமரா மட்டும் எப்படி இயங்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் 2011

சென்னை:தமிழகம் முழுவதும் நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவில், 77.02 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது

சுப்ரமணிய சாமியும் தேவர்களும்

திரு. சு.சாமி, ”என் அம்மா அடிக்கடி நீ பிராமணன் இல்லை, தேவர் என்பார். அதற்கு காரணம் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். அய்யர் என்றால் அடக்கமாக இருப்பார்கள். தேவர் என்றால் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். என் மனப்பான்மை தேவர் மாதிரிதான். அதனால் என்னை யாராவது சுப்ரமண்ய சுவாமி தேவர் என்று சொன்னால் எனக்கு அது பெருமையான விஷயம். கவுரவமாக நினைக்கிறேன்” என்று கூறியிருப்பது மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Source: Savukku at http://www.savukku.net/home1/1330-2011-10-17-08-56-12.html

தீபாவளி(லி)யும் தமிழரும்!


தீபாவளியை தீப ஒளி திருநாளாய் கொண்டாடுகிறோம் நாம். ஆனால், கீழ் காணும் செய்தி தீபாவளி தமிழருக்கான சரியான பண்டிகை அல்ல என்று குறிப்பிடுகிறது. இது ஈழத் தமிழர்களின் கருத்தாக நான் உணர்கிறேன். படித்துவிட்டு பிண்ணூட்டம் இடுங்கள். நன்றி,


உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி
வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. சுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும்.